வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Thursday, May 31, 2007

குரு சீடர் உறவு--குரு என்ற கருணை நிலை!

அன்புள்ள நண்பர்களே எல்லாம் வல்ல குரு அருளின் துணையுடன் அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ வாழ்க வளமுடன். அன்பு என்றால் என்ன? இறை நிலை கருணை நிலையானதா? இறை நிலை -இருப்பு நிலை என்றால் அது விழிப்பு நிலையா? இப்படி நாம் பல கேள்விகளை கேட்டுக்கொண்டே தான் இருக்கிறோம்! உண்மையில் நாம் கேள்வியில் நிலைத்தால் அது அறிவிற்க்கு அசைவே ஆகும். எல்லா கேள்விகளையும் கேட்கும் நாம் அந்த கேள்விக்கான பதில்களை தெரிந்து கொள்ள வேண்டும் எனில் அதற்க்கு நாம் தயாராக வேண்டும்! உதாரணத்திற்க்கு, எப்படி நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் எனில் நீரில் இறங்கித்தான் ஆக வேண்டுமோ அது போலத்தான் ! வெறும் கேள்வி- ஞானம் என்பது நீச்சல் அடிக்க உதவாதோ அது போலத்தான் இறை நிலையை பற்றி அறிய கேள்விகள் மட்டும் உதவாது! விரக்தி தான் மிஞ்சும்! எந்த விவாதங்கள் எதற்க்கு உதவும் என்பதை அறிவது கூட நமக்கு பல விசயங்களை கற்றுக்கொடுக்கும்! நம் குரு நாதர் சொன்ன மாதிரி, நாம் எந்த மன நிலையில் இருக்கிறோம் என்பதை அறிவது மிக முக்கியம்! நம் குரு நாதர் சொன்ன மாதிரி, இறை நிலை அடைய விரும்பாமை கூட நாம் இறைனிலையில் இல்லாததற்க்கு ஒரு காரணம் தான்! அடைய விரும்பாத ஒரு விசயத்திற்க்காக, கற்றுக்கொள்ள விரும்பா ஒரு விசயத்திற்க்காக நாம் மணிக்கணக்கில் விவாதிக்கிறோமா? உண்மையிலேயே நாம் இறை நிலையின் தன்மையை ஏற்றுக்கொள்ளத்தயாரா? இருப்பு நிலையில் மனதை செலுத்தினால் நாம் அதன் தன்மையை ஏற்கும் நிலையில் நாம் இல்லை என்று தெரிய வரும்! இவற்றை ஏன் எழுதுகிறேன் என்றால்... நாம் இறை நிலையையோ அல்லது இறை வடிவான குருவிடம் உலக, சமூகக்குறைகளை தெரிவித்துக்கொண்டே தான் இருக்கிறோம் என்பதால்! சரி..... இறைனிலை என்பது இருப்பு நிலை என்றால் அது விழிப்பு நிலையா அல்லது அன்பும் கருணையுமானதா? இறை நிலையில் நம் மனதை வைத்து தியானிக்கும் போது நாம் மெல்ல மெல்ல அசையா நிலைக்குச் செல்ல நேரும். அப்போது தான் கேள்வி என்பது மௌனத்தில் இருந்து வருவது என்பதும், கேள்வி என்பது எண்ணமாக வடிவம் பெறுவதும் புரியும்! ஆக எண்ணம் என்பது தான் மௌனத்தில் நாம் அசைவதை உணர்த்துகிறது!எண்ணம் தான் நமக்கு முக்கியம் எனில் நாம் அசையா நிலையை அடைந்து அதுவாக ஆக வேண்டும் என்ற நிலையில் இல்லை என்பது தெளிவு! இருப்பு நிலை என்பதை மனது அறிய முயற்ச்சிக்கும் போது, மெல்ல எண்ணமற்ற, கேள்வியற்ற நிலையை அடையும். அப்போது இருப்பு நிலையின் தன்மையாக மனது வடிவெடுக்கும். பூரண அமைதியை நோக்கி செல்லும் போது மனது இருப்பு நிலையில் சென்று ஒடுங்கிப்போகும்! அப்போது இறைனிலையின் தன்மையே மிஞ்சும்! மனதோ கேள்வியை கடந்திருக்கும்! இறை நிலை முழுமையான ஈர்ப்பு நிலை என்று அப்போது பூரண அறிவு சொல்லும்! இவை எல்லாம் அனுபவங்களாக தெரியும் போது மட்டும் தான் நம் அறிவிற்க்குள் நிலைக்கும்! இறைனிலை என்பது இருப்பு நிலை என்றால் அது விழிப்பு நிலையா என்றால் ஆமாம்.... இறை நிலை அடையும் வழியில் நம் ஆன்மாவை சுற்றி நாம் கட்டியிருக்கும் எண்ணற்ற கட்டுக்களை அறுத்து எறிய நம்மிடம் அனுமதி கேட்கும்! இறை நிலை என்பது உறக்க நிலை அல்ல! அதன் மீது கொண்டுள்ள பற்று மட்டும் தான் மற்ற எல்லா பற்றுக்களையும் விடும் அனுமதியை நாம் தரும் பாக்கியம் பெறுவோம்!குருவின் மேல், இறை நிலையின் மேல் அன்பு இருந்தால் மட்டுமே அந்த அனுமதி நமக்குக்கேட்கும்!குருவின் முன் எல்லாவற்றையும் உதறிவிடும் போது நம் அறிவு விரியும் நிலையை எய்தும்! அப்பேற்ப்பட்ட அறிவு என்பதை விளக்க நேரும் போது, அன்பு என்ற வார்த்தையை மட்டும் தான் சொல்ல முடியும்! ஆனால் அதுவே பற்றுக்களை நெறித்த இடம்! எல்லா பற்றுக்களை விட்டு விட்டு நிர்மூலமாக விரிந்து விளங்கும் அறிவாக இருக்கும் நிலையில் உறக்கத்திற்க்கு இடமேது? அதுவே தான் பூரண விழிப்பு நிலை! அந்த நிலையில் நாம் குருவோடு இணைந்திருக்கும் போது நமக்கு உலகம் என்றும் உணர்ச்சி என்றும் வேறு எந்த நிலையும் அண்ட முடியாது போகும்! குருவின் முன் எனக்கு ஏற்படும் உணர்வுகளையும் வீசி எறிந்து விடுகின்றேன்! அப்பா! உலகம் என்று எனக்கு எதுவுமில்லை! இன்பம் துன்பம் என்ற உணர்வு எதுவுமில்லை! வாழ்க்கை என்ற போராட்டத்தில் நீந்தும் என்னைப்போன்ற பிள்ளைகளை எப்போதும் தாயைப்போல அரவணைக்கும் குருவே, உங்களிடம் கேள்வி கேட்டு, என்னை அசையவைத்து உங்களிடம் இருந்து என்னை பிரிக்காத வரம் வேண்டும்! உங்களை அண்டும் போதெல்லாம் என்னை ஆட்கொள்ளும் தூய சத்குருவே! சொல்லிலடங்கா உணர்வுகளை புரிய வைக்கும் ஆனந்தமான வடிவம் நீங்களன்றோ! உங்கள் கருணை நிலையை என்னவென்று சொல்வேன்? வார்த்தைகள் மீதமில்லையே! குருவே சரணம்! வாழ்க வளமுடன்!

No comments: