வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Monday, July 30, 2007

ஆன்மீகப் பயிற்சியின் பயன்

நாமே முதலில் ஆன்மீகப் பயிற்சியில் விளையும் நன்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் பிறர் வினாவுக்குத் தெளிவான பதிலளித்து மனநிறைவு பெறலாம். திருப்தியான பதிலை அனுபவபூர்வமாக, அறிவின் தெளிவோடு அளிக்க முடியவில்லையெனில் நமக்கே சோர்வு உண்டாகிவிடும். இத்தகைய சோர்வினால் பயிற்சியைக் கைவிட்டு விடுபவர்கள் பலர். இந்தக் குழப்பமும் நட்டமும் ஏற்படாதிருக்கவும் கேள்வி கேட்போருக்கு மனத் தெளிவோடும் உறுதியோடும் பதில் சொல்லவும் இங்கு ஆன்மீகப் பயிற்சியின் நல்விளைவுகளை விளக்கிக் கூறுகிறேன். 1. முறையான உடற்பயிற்சியினால் நோய் வராமல் காத்துக் கொள்ளுகிறோம். உள்ள நோய்களும் காலத்தால் குணமாகின்றன. குறைந்தபட்சம் கொடுமை குறைகிறது. 2. மனிதனின் உடலை விட முக்கியமான பொருள் உயிர். அது விஞ்ஞானக் கருவிக்கும் எட்டாதது. அவ்வளவு நுண்மையானது. அந்த உயிரை உணர்வாகப் பெறுகிறோம். தீட்சையின் முதல் நாளன்றே உயிர்மேல் மனம் வைத்து ஒன்றி ஒன்றிப் பழகி வர, அறிவு நுண்மையும், கூர்மையும் பெறுகிறது. பயிற்சியால், அறிவு பெறும் உறுதி, நுட்பம், ஆற்றல் இவை வாழ்க்கைத் துறைகள் அனைத்திலும் வெற்றியடையச் செய்கிறது. 3 அகத்தாய்வுப் பயிற்சியினால் எண்ணத்தின் தன்மையும் தன் முனைப்பால் அறிவு திசை மாறி பேராசை, சினம், கடும்பற்று, வஞ்சம், முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை ஆகிய ஆறு குணங்களாக அவ்வப்போது மாறுவதும் அந்த உணர்ச்சி வயப்பட்ட குணங்களின் வழியே செயல்புரிய அவற்றால் தனக்கும் பிறர்க்கும் ஏற்படும் தீய விளைவுகளைக் கண்டுபிடிக்கவும் முடிகிறது. அடுத்துப் பயிலும் ஆசைச் சீரமைப்பு, சினம் தவிர்த்தல், கவலையொழித்தல் ஆகிய பயிற்சிகள் முறையாகப் பழகும்போது மனிதன் மனிதத் தன்மையோடு அமைதியும், இன்பமும் காத்து வாழ முடிகிறது.

No comments: